திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Friday, October 29, 2010

சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்

சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்
(ஆசிரியர் : சிவவாக்கியர்) 
 
காப்பு
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.
0
கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.
1
அக்ஷர நிலை

ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.
2
சரியை விலக்கல்

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
3
யோக நிலை

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.
4
தேகநிலை

வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே
நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே.
[நந்துதல் - இச்சை கொள்ளுதல்; நடுவன் - எமன்]
5
ஞான நிலை

என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.
6
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.
7
மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ;
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ;
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ-
நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.
8
அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.
9
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
10
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
11
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
12
யோக நிலை

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்
சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!
13
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.
பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.
14
வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை
தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்ஙனே?
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்!
சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே.
15
அஞ்சும்மூணும் எட்டாதாய் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்கும்என்று நான்மறைகள் பன்னுமே.
16
அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாசல் ஆயிரம்
இந்தவாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாய்
எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே?
17
சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன்எங்கள் ஈசனே!
18
சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால்
மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை?
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரை ஊதவல்லீரேல்
கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே.
19
அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.
அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!
20
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே!
பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்!
நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்
அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே!
21
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்,
வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே?
காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!
22
ஓடம்உள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்;
ஓடம்உள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்;
ஓடமும்உடைந்த போதில் ஒப்பிலாத வெளியிலே
ஆடும்இல்லை கோலும்இல்லை யாரும்இல்லை ஆனதே!
23
கிரியை நிலை

வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே!
24
உற்பத்தி நிலை

அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?
25
அறிவு நிலை

பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை?
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?
மிண்டனாய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை?
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?
26
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மைதன்னை யார்அறிய வல்லரே?
விண்டவேதப் பொருளைஅன்றி வேறு கூற வகையிலாக்
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.
27
தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஅப் பராபரம்
ஊருநாடு காடுமோடி உழன்றுதேடும் ஊமைகாள்!
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே!
28
தங்கம்ஒன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே!
29
நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்;
நெருப்பும்நீரும் உம்முளே நினைந்துகூற வல்லீரேல்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமோ!
30
பாட்டில்லாத பரமனைப் பரமலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிமங்கை பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்துக் குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பைக் கூப்பிடா முகிஞ்சதே.
31
குசுகுசுப்பை - சுருக்குப்பை
தரிசனம்

செய்யதெங்கி லேஇளநீர் சேர்த்தகார ணங்கள்போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்.
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.
32
அறிவு நிலை

மாறுபட்டு மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே.
மாறுபட்ட தேவரும் அறிந்துநோக்கும் என்னையும்
கூறுபட்டுத் தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே.
33
கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
34
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!
35
பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே!
36
இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான்
உருக்கிநெஞ்சை உட்கலந்திங்கு உண்மைகூற வல்லீரேல்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமோ!
37
கலத்தின்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின்மாயை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ!
38
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!
39
வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்;
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?
வாயில்எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!
40
ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!
41
பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?
குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே.
அறுப்பென செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்.
42
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் சங்குமோ?
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ?
இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ?
செம்பொன் அம்பலத்துளே தெளிந்த சிவாயமே.
43
சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே
சத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றது
முத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?
வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே.
44
ஒடுக்க நிலை

சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்
சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்
மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே.
45
கிரியை

சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?
காதில்வாளில், காரை, கம்பி, பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ?
46
அறிவு நிலை

கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.
47
அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர்,
துறைஅறிந்து நீர்குளித்த அன்றுதூமை என்றிலீர்,
ப்றையறிந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர்,
புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.
48
தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.
49
சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே.
50
கைவடங்கள் கண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்?
எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணிஎண்ணிப் பார்க்கிறீர்?
பொய்யுணர்ந்த சிந்தையைப் பொருந்திநோக்க வல்லீரேல்
மெய்கடந்து உம்முளே விரைந்து கூறல்ஆகுமே.
51
ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.
52
இடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம், வலக்கைசூலம் மான்மழு;
எடுத்தபாதம் நீள்முடி, எண்திசைக்கும் அப்புறம்,
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே?
53
நாழிஅப்பும் நாழிஉப்பும் நாழியான வாறுபோல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடம்
ஏறில்ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே.
54
தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்;
எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்;
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.
55
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
சத்தியான வித்துளே முளைத்தெழும் அச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தன்ஆடல் கண்டபின் அடங்கல்ஆடல் காணுமே.
56
உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்;
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவீர்;
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில்
சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே.
57
போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.
58
அகாரம்என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ?
உகாரம்என்ற அக்கரத்துள் உவ்வுவந்து உதித்ததோ?
அகாரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதோ?
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.
59
அறத்திறங் களுக்கும்நீ, அண்டம்எண் திசைக்கும்நீ,
திறத்திறங் களுக்குநீ, தேடுவார்கள் சிந்தைநீ,
உறக்கம்நீ, உணர்வுநீ, உட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே.
60
அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,
கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,
புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,
கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.
61
மைஅடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்லல்அற்று இருப்பீர்கள்
மெய்அறிந்த சிந்தையால் விளங்குஞானம் எய்தினால்
உய்யறிந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே.
62
கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குருவிருந்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லீரேல்
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்றுநீர்
திருவிளங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே!
63
தீர்த்தம்ஆட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்,
தீர்த்தம்ஆடல் எவ்விடம் தெளிந்துநீர் இயம்புவீர்?
தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே!
64
கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழிந்துபோன பாவம் என்னபாவமே?
அழுத்தமான வித்திலே அனாதியான இருப்பதோர்
எழுத்திலா எனழுத்திலோ இருக்கலாம் இருந்துமே.
65
கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லீரேல்
பண்டைஆறும் ஒன்றுமாய்ப் பயந்தவேத சுத்தனாய்
அண்டமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் மூலமே!
66
ஈன்றவாச லுக்குஇரங்கி எண்ணிறந்து போவீர்காள்!
கான்றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லீரேல்,
தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே.
67
உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும் ஊமைகாள்?
உழலும்வாச லைத்திறந்து உண்மைசேர எண்ணிலீர்?
உழலும்வாச லைத்திறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
உழலும்வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே.
68
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே.
69
இருக்கவேணும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ?
மரிக்கவேணும் என்றலோ மண்ணுளே படைத்தனர்?
சுருக்கமற்ற தம்பிரான் சொன்னஅஞ் செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம்கெடீர்.
70
அம்பத்தொன்று என அடங்கலோர் எழுத்துளோ?
விண்பரந்த மந்திரம் வேதம்நான்கும் ஒன்றலோ
விண்பரந்த மூலஅஞ் செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே.
71
சிவாயம்என்ற அட்சரம் சிவன்இருக்கும் அட்சரம்
உபாயம்என்று நம்புதற்கு உண்மையான அட்சரம்
கபாடமற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம்இட்டு அழைக்குமே சிவாயஅஞ் செழுத்துமே.
72
உருவம்அல்ல, வெளியும்அல்ல, ஒன்றைமேவி நின்றதல்ல
மருவும்வாசல் சொந்தம்அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானும்அல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே?
73
ஆத்துமா அனாதியோ? அனாத்துமா அனாதியோ?
பூத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ?
தர்க்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ?
வீக்கவந்த யோகிகாள்? விரைந்துரைக்க வேணுமே!
74
அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்;
நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அரிகிலீர்;
உறியிலே தயிர்இருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே?
75
அன்பு நிலை

இருவர்அரங்க மும்பொருந்தி என்புருகி நோக்கிலீர்;
உருவரங்கம் ஆகிநின்ற உண்மைஒன்றை ஓர்கிலீர்;
கருஅரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்துபின்
திருஅரங்கம் என்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே!
76
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்திருத்தி மெய்யினால் சிவந்தஅஞ் செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.
77
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடிதேவர் என்னதுஉன்னது என்னவும்
கண்ணிலேகண் மணிஇருக்கக் கண்மறைத்த வாறுபோல்
எண்ணில்கோடி தேவரும் இதன்கணால் விழிப்பதே.
78
அறிவு நிலை

மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும்என்று பேணுவார்;
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும்என்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே.
79
மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள்பெண்டீர் சுற்றம்என்று மாயைகாணும் இவையெலாம்
மறலிவந்து அழைத்தபோது வந்துகூடலாகுமோ?
80
விறகு - கர்வம்

ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே
ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே
அக்கணிந்து கொன்றைசூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அனேகபாவம் அகலுமே.
81
மாடுகன்று செல்வமும் மனைவிமைந்தர் மகிழவே
மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல்கிடந்து உயிர்கழன்ற உண்மைகண்டும் உணர்கிலீர்!
82
பாடுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம் உன்னியே
பழுதிலாத கன்மகூட்டம் இட்டஎங்கள் பரமனே
நீடுசெம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே,
நீலகண்ட காலகண்ட நித்தியகல் யாணனே.
83
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானம்உற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையே;
ஊனமற்ற சோதியோடு உணர்வுசேர்ந்து அடக்கினால்
தேன்அகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே.
84
பருகிஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
நிருவியே நினைந்துபார்க்கில் நின்மனம் அதாகுமே.
உருகிஓடி எங்குமாய் ஓடும்சோதி தன்னுளே
கருதுவீர் உமக்குநல்ல காரணம் அதாகுமே.
85
சோதியாகி ஆகிநின்ற சுத்தமும் பல
 

1 comments:

Unknown said...

.வீரமனிவீரமணி?

Post a Comment

 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design